/ கலி காலம்: புத்தகக் கண்காட்சியும் மிளகாய் பஜ்ஜியும்...

Sunday, January 20, 2013

புத்தகக் கண்காட்சியும் மிளகாய் பஜ்ஜியும்...

வாகன வரிசை புழுதியைக் கிளப்ப சாரை சாரையாக மக்கள் கூட்டம் திருவிழா நெரிசல் போல இருக்க‌ நந்தனம் மைதானத்தில் உண்மையிலேயே புத்தகத் திருவிழா உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இடமும் வலமுமாக மொத்தம் இருபத்தாறு வரிசைகளில் நமக்குத் தேவையான பதிப்பகத்தையும் நினைவில் வைத்திருக்கும் நூல்களையும் கண்டுபிடிக்க‌, சற்று "உழைப்பு" தேவைப்பட்டாலும் அது மனதுக்கு உற்சாகம் தரும் உழைப்பு. பதிப்பக வரிசையை பெரிய வெள்ளைத் தட்டியில் ஒவ்வொரு வரிசை முன்பாக பெரிதாக வைத்திருந்தாலும் அதன் பயன் முழுவதுமாக கிடைக்க நாம் விட்டு விடுவோமா? எனவே பலர் அதன் அருகே  chair போட்டு தங்களால் இயன்ற அளவு மறைத்தபடி அமர்ந்திருந்தனர்.

"who is வை.மு. கோதைநாயகி" என்று கேட்ட சிறுவனுக்கு பொறுமையாக பதிலளித்து, அவரின் புகைப்படத்தை காட்டுகிறேன் என்று ஒரு stall நோக்கி அழைத்துப் போன ஒரு அம்மா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பட வைத்தார்.

வழக்கம் போல "முன்னேற்றம் காண முத்துக்கள் நூறு" போன்ற "வளர்ச்சி" பற்றிய புத்தகங்கள் நிரம்பிய ஸ்டால்களில் மக்கள் அலைகடலென திரண்டு இடித்துப் பிடித்தபடி "முன்னேற" முயன்று கொண்டிருந்தனர்.

"இங்கு RSS புத்தகங்கள் கிடைக்கும்" என்ற board தொங்கும் stall எதிரே பெரியார் புத்தகங்கள் பெருமளவு கிடைக்கும் ஸ்டால். ஜனநாயகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்படுவதில் நாம் பெருமிதம் கொள்ளலாம் சார்...

சிறுகதைத் தொகுப்புகளை தேர்ந்தெடுப்பதில் நமக்கு மிகுந்த கவனம் வேண்டும். வெவ்வேறு தொகுப்புக்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை பல பதிப்பகங்களில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன் போன்றவர்களின் கதைகளுக்கு இந்த நிலை நிறைய நேர்ந்திருக்கிறது.

உயிர்மை உள்ளே லா.ச.ரா சிறுகதை தொகுப்பின் அட்டையில் வரையப்பட்டிருக்கும் அவர் முகத்தை சற்று நேரம் பார்த்தபடி இருந்தேன். அவர் எழுத்தின் மூலம் நாம் காலத்தையே வார்த்தைகளில் நிரப்பி நிரப்பி சாப்பிடலாம் இல்லையா சார்?

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் வழக்கமாக சில அரிதான பழைய புத்தகங்கள் கிடைக்கும். இந்த முறை எதுவும் சிக்கவில்லை. வருடங்கள் போகப்போக, chennai book exhibition என்பது தேடுதல் அதிகமாகவும் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவும் தருவது போலத் தோன்றுகிறது. உங்களுக்கு?

முன்னரே திட்டமிட்டபடி, பத்து பதினைந்து பதிப்பகங்களில் சுமார் நான்கு மணி நேரம் நன்கே கழிந்த பின், வயிறு "நானும் இருக்கிறேன்" என்று கூவத் துவங்க, "சாப்பிட வாங்க" அழைப்பை ஏற்க நேர்ந்தது...அங்கு எனக்கு முன் "cash counter" வரிசையில் நின்றிருந்த ஒருவர், தினமும் ஒரே menuவா இல்லை வேறு வேறா என்று விசாரித்து தெரிந்து கொண்டார். பக்கத்திலிருந்த அவரின் நண்பரிடம் "நாளைக்கு மிளகாய் பஜ்ஜி try பண்ணலாம்டா" என்றார். நான் அவரைப் பார்க்கவும் அவர் என்னைப் பார்க்கவும், இருவரும் லேசாய் சிரித்துக் கொண்டோம். அப்பொழுதே நான்  மிளகாய் பஜ்ஜி "try"  பண்ணுவதற்காகத்தான் வரிசையில் நிற்கிறேன் என்று அவருக்குத் தெரியாது!

பிறகு பஜ்ஜி வாங்குவதற்கு நிற்கும் பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனை விதமான மனிதர்கள் சார்!

1 comment:

  1. லாசரா பற்றி நீங்கள் எழுதியது முழுவதும் சரி.

    ReplyDelete