/ கலி காலம்: பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

Thursday, January 17, 2013

பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

என்னய்யா இது புதுசாய் ஒரு குண்டு வீசுகிறாய் என்று ஆச்சரியமா? பதிவை படித்து முடித்த பின் ஆச்சரியம் போய் எதிர்பார்ப்பும் ஒரு வித "பாசப் பிணைப்பும்" நம் பவர் ஸ்டார் மீது வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது...வாருங்கள், என்ன சேதி என்று பார்ப்போம்...

சில மாதங்கள் முன்பு வரை சிலர் மட்டுமே அறிந்திருந்த பவர் ஸ்டார், நீயா நானா கோபிநாத் "உபயத்தில்" பலரின் நெஞ்சுக்குள் இடம் பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்! தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாடே லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது...

பவர் ஸ்டாரின் பண்புகள் இன்றைய அரசியலுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்று பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்ப்போம்:

பண்பு 1: பத்திரிகைகள் இவரை கோமாளி போலவே நடத்தின. இவரின் பேட்டிகளை காமெடி போல பிரசுரித்தன. பின்னர் சேனல்களில் அழைத்து, நையாண்டி என்ற பெயரில் முடிந்த அளவு அவமானப் படுத்தினர். இவை அனைத்திற்கும் இவரின் முகத்திலிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

நியாயமாக கேட்கப்படும் நிருபரின் கேள்விகளுக்குக் கூட "வரியா சேர்ந்து தீக்குளிக்கலாம்" என்று தப்பிக்கும் அரசியல்வாதிகளும், நாக்கைத் துருத்தும் நாகரீகம் அற்ற அரசியல்வாதிகளும், தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் முடிந்தது கதை என்ற நிலையில் அனைவரும் தன் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், அனைவரின் நக்கல்களுக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மவருக்கு "புன்னகை தலைவர்" என்று பட்டம் கொடுக்கலாம் தானே சார்?

பண்பு 2: இவர் தனக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது காமெடிதான். ஆனால் இன்று பல letter pad கட்சிகள் தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர் என்று அடித்து விடுகிறார்களே அதை விடவா சார் இவர் காமெடி செய்கிறார்? அரசியல் அரிச்சுவடியை சரியாகத்தானே செய்கிறார்?

பண்பு 3: தானே தயாரித்து நடித்து வெளியிட்ட படத்தை பார்க்க எவரும் வராமல் தியேட்டர் காற்றாடியதால், தானே காசு கொடுத்து படத்தை ஓட்டுவதாக இவர் மீது விமர்சனம் இருக்கிறது. என்ன சார் இது அநியாயம்? நம் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா? அவர் பணத்தை வைத்துக் கொண்டு அவர் publicity செய்தால் நமக்கென்ன வந்தது...

பண்பு 4: இவர் விளம்பர பிரியராம். எனவே எப்படியாவது தன் பெயர் வெளியில் தெரியுமாறே எல்லா வேலைகளையும் செய்வாராம்...ஏதாவது சாக்கில் போஸ்டர்களில் பல்லைக் காட்டிக் கொண்டு திரியும் விளம்பர மோகம் பிடித்த‌ தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு விஷயமா சார்?

குறிப்பு: சமீபகாலம் வரை அனைத்து பேட்டிகளிலும் cooling glass அணிந்து வந்தவர், இப்போது மாறி விட்டார். அற்புதமான வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டார். அவரின் கண்ணாடி பழக்கம் பற்றி நக்கலாக கேள்விகள் கேட்கும் பொழுது, தனது cooling glassஐ தடவியபடி, "இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்னும் பாரதிதாசன் வரி என்னை மிகவும் பாதித்து விட்டது. சமூகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதே என் பணி என்று எப்போதும் நினைவில் நிறுத்தவே cooling glass மூலம் என்னை நானே இருட்டாக்கிக் கொள்கிறேன்" என்று ஒரு போடு போட்டிருந்தார் என்றால், நாமும் "ஆஹா, என்னே ஒரு தமிழ் ரசனை, என்னே ஒரு சமூக அக்கறை" என்று மெய்சிலிர்த்துப் போய் "பக்குவத் தமிழன் பவர் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருப்போம்...பட்டம் கொடுத்தே கெட்ட கூட்டம்தானே சார் நாம்...

இப்போது சொல்லுங்கள்...இந்த பதிவின் தலைப்பு விரைவில் உண்மையாகும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? 

2 comments:

  1. உண்மையாக நிறைய வாய்ப்பிருக்கிறது

    ReplyDelete
  2. let him be only an entertainer.his mass should be only for enjoyment and not for his political disaster.

    ReplyDelete